கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடனான உரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை காணொலி மூலமாக இன்று கலந்துரையாடினார்.
இந்த உரையாடலுக்குப் பின்னர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
இன்று காலை மிகவும் பயனுள்ள ஒரு உரையாடல் சுந்தர் பிச்சையுடன் நிகழ்ந்தது. நாங்கள் பல விஷயங்கள் பற்றி பேசினோம். குறிப்பாக நாட்டில் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினோம்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் உருவாகி வரும் புதிய பணி கலாசாரம் பற்றி நான் பேசினேன். கரோனா தொற்றுநோயால் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். மேலும், தரவு பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினோம்.
டிஜிட்டல் துறைகளில் கூகுளின் பங்கு குறித்து கேட்டறிந்தேன். குறிப்பாக கல்வி, கற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூகுளின் முக்கியத்துவம் குறித்து தெரிந்தது கொண்டேன்' என்று பதிவிட்டுள்ளார்.