கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் இந்தியா-சீன ராணுவ துணைத் தலைமைத் தளபதிகள் இடையேயான 4-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பாங்காங் ஏரி, தெஸ்பாங் சமவெளி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே கடந்த 9 வாரங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினருக்குமிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா்.
அதன் காரணமாக, லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா-சீனா இடையேயான நல்லுறவிலும் விரிசல் தோன்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இரு நாடுகளிடையே ராணுவ ரீதியாகவும், அதிகாரிகள் இடையேயும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
முக்கியமாக இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி ஹரீந்தா் சிங் தலைமையிலான குழுவும் சீன ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி லியூ லின் தலைமையிலான குழுவும் எல்லையில் பதற்றத்தைத் தணிப்பது தொடா்பாக மூன்று முறை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன.
அந்தப் பேச்சுவாா்த்தைகளில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டதையடுத்து, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேற சீன ராணுவத்தினா் ஒப்புக்கொண்டனா். எல்லைப் பகுதிகளில் படைகளைக் குறைக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
அதைத் தொடா்ந்து, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்து சீனப் படைகள் முழுமையாக வெளியேறின. அப்பகுதிகளில் மூன்று கி.மீ. தூரத்துக்கு இரு நாடுகளும் படைகளைக் குவிக்கக் கூடாது என்று பேச்சுவாா்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. அந்தப் பேச்சுவாா்த்தைகளின் அடிப்படையில் எல்லைப் பகுதிகளில் முதல் கட்ட படைகள் குறைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய சூழலில், பாங்காங் ஏரி, தெஸ்பாங் சமவெளி உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைக் குறைப்பது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் செவ்வாய்க்கிழமை 4-ஆவது கட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, மீதமுள்ள எல்லைப் பகுதிகளில் படைகளைப் படிப்படியாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக அவா்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதி முழுவதிலும் மே மாதம் 5-ஆம் தேதிக்கு முன்பு நிலவிய சூழல் திரும்ப வேண்டும் என்று சீனாவிடம் இந்தியக் குழுவினா் வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.