திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் என்றும் இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் மாலன், வார இதழுக்கு எழுதிய கட்டுரை ஒன்றையும் அவர் இத்துடன் பகிர்ந்துள்ளார். அந்தக் கட்டுரையில் பிரதமர் மோடி தனது பல்வேறு உரைகளில் திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களின் வரிகளை மேற்கோள் காட்டி பேசியிருந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.