பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு திருப்பதி கோயில் உண்டியலில் போடப்பட்ட சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும்படி கோயில் நிர்வாகம் மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து திருப்பதி ஏழுமலையான் கோயில் அறக்கட்டளை தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி, புது தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, கோயில் நிர்வாகத்திடம் இருக்கும் ரூ.50 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஆராய்ந்து, பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் முடிவு தெரிவிப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதன்பிறகும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பழைய செல்லாத நோட்டுகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது ரூ.50 கோடி மதிப்புள்ள செல்லாத நோட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.