கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,038 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். இதன்படி, அங்கு புதிதாக 1,038 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்படுவது கேரளத்தில் இதுவே முதன்முறை.
இதில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 87 பேர், வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 109 பேர். இன்றைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 57 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
இதைத் தொடர்ந்து கேரளத்தில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 8,818 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,164 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 20,847 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
அதேசமயம், பொது முடக்கம் பற்றி அவர் பேசியதாவது:
"திருவனந்தபுரத்தில் மட்டும் இன்று 226 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 190 பேருக்கு உள்ளூர் பரவல் மூலமே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலைமை தீவிரமாக உள்ளது. கேரளத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது." என்றார் பினராயி விஜயன்.