அகர்தலா: மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்ததை அறிந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரின் மரணம் குறித்து அறிந்த மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், 23 வயதான சுப்ரியா தாஸ் என்ற பெண்ணுக்கு நான்கு நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தையைப் பெற்றெடுக்காமல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததற்காக அவரது கணவர் பிரான் கோபிநாத் தாஸ் மற்றும் கணவரின் குடும்பத்தினர் சுப்ரியாகவை கடுமையாக துன்புறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் நேரிட்ட நிலையில், கடந்த ஞாயிறன்று கோபிநாத் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அகர்தலா மருத்துவக் கல்லூரியில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், கணவர் குடும்பத்தார் கடுமையாக திட்டியதால், மருத்துவமனையிலேயே சுப்ரியாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம் அகர்தலாவில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ள கௌதம்நகர் பகுதியில் நேரிட்டது.
இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் கூறுகையில், பெண் குழந்தை பிறந்தது முதலே அவரது மாமியார் சுப்ரியாவை கடுமையாக திட்டி வந்தனர். பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது என்று அவர் கூறி வந்ததாகவும் தெரிவித்தனர். இதுவரை இந்த சம்பவத்தில் காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை.