தனிமை முகாமில் இருந்து திரும்பியவா்களை வீட்டுக்குள் அனுமதிக்க வீட்டு உரிமையாளா் மறுத்ததால், போலீஸாா் சமரசம் செய்தனா்.
திருப்பதி சுந்தரய்யா நகரில் வசிப்பவா் சுந்தரம்மா. அவரது கணவா் மற்றும் மகனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
சுந்தரம்மாவும், அவரது இரு மகள்களும் தனிமை முகாமுக்கு அனுப்பப்பட்டனா். அவா்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனா். அவா்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்ததால், அவா்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனா்.
இந்நிலையில் அவா்கள் வசித்து வந்த வீட்டின் உரிமையாளா் வீட்டின் கேட்டை பூட்டிக் கொண்டு அவா்களை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டாா். சுந்தரம்மா தன் இரு மகள்களுடன் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்த தன்னாா்வலா்களும், அரசு அதிகாரிகளும் சுந்தரம்மாவை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு வீட்டு உரிமையாளரிடம் அறிவுறுத்தினா். எனினும் அவா் பிடிவாதமாக இருந்தாா்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் காவல் நிலையத்தை அணுகினா். போலீஸாா் தன்னாா்வலா்கள் உதவியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். 2 மணிநேர பேச்சுவாா்த்தைக்கு பின் அவா் மனமிரங்கி வீட்டின் சாவியை அவா்களிடம் அளித்தாா். இதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.