பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ வீரர்களுக்கு கையால் தயாரிக்கப்பட்ட ராக்கி கயிறுகளை இந்தூர் பெண்கள் அனுப்பவுள்ளனர்.
நாட்டில் சகோதரர்களைக் கொண்டாடும் 'ரக்ஷா பந்தன்' நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் தங்களது சகோதரர்களின் கைகளில் அணிவிப்பதற்கு ராக்கி வாங்குவர். இதையொட்டி, பாஜக எம்.பி. ஷங்கர் லால்வானி ஒரு புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். இந்தூர் தொகுதி பெண்களிடம் தன்னம்பிக்கையை உருவாக்கும்பொருட்டு பெண்களை ராக்கி தயாரிக்க ஊக்குவித்துள்ளார். அதன்படி, அவர்கள் ஒரு லட்சம் ராக்கிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முழுவதும் கைகளாலேயே ராக்கி கயிறுகளை செய்கின்றனர். இதில் 70,000 ராக்கி கயிறுகள் உருவாக்கியுள்ளனர்.
மேலும், அவர்கள் கைகளால் உருவாக்கப்பட்ட இந்த ராக்கிகளை பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அனுப்ப உள்ளனர். மேலும், சுமார் 21,000 ராக்கிகளை இந்திய ராணுவ வீரர்களுக்கு அனுப்புகிறார்கள். மீதியுள்ள ராக்கிகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா', 'உள்ளூர் தயாரிப்புகள்' ஆகியவற்றின் கீழ் இந்தூரில் 22 மையங்களில் பெண்கள் ராக்கிகள் தயாரிக்கின்றனர் என்றும் ராக்கிகளை விற்று கிடைக்கும் பணம் பெண்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் இது பெண்களிடையே ஒரு தன்னம்பிக்கையை உருவாக்கும் என்றும் லால்வானி தெரிவித்துள்ளார்.