கரோனா பரவும் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படமாட்டாது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டில் பிகார், உத்தரப் பிரதேசம், கேரளம், அசாம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போது திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு 6 மாத கால அவகாசம் என்ற விதிமுறைகளின்படி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதேபோன்று மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள ஒரு சில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் நாட்டில் தற்போது கரோனா பரவும் சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை எனவும், கரோனா பரவல் முழுவதுமாகக் குறைந்து, நிலைமை சீரான பின்னரே பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.