புது தில்லி: உலகிலேயே இந்தியாவில் தான் குறைவான கரோனா பாதிப்பும், குறைவான உயிர்பலியும் நேரிடுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, இதுவரை நாட்டில் 1 கோடியே 5 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 3.5 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஆனால், தொடர்ந்து கரோனா பரிசோதனை உயர்த்தி, நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12.5 லட்சத்தை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 63.45% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 2.3% ஆகவும் உள்ளது.
உலகிலேயே ஒரு லட்சம் பேரில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும், கரோனா பாதித்து பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் குறைவாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.