பிரான்ஸில் இருந்து முதற்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா புறப்பட்டுள்ளன.
பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்க ரூ.60,000 கோடியில் மத்திய அரசு கடந்த 2016-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, 5 ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை இறுதிக்குள் இந்தியாவுக்கு வரும் என்று இந்திய விமானப்படை தகவல் தெரிவித்தது.
அதன்படி, பிரான்ஸில் முதற்கட்டமாக தயாரிக்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிரான்ஸில் இருந்து இந்தியாவை நோக்கி பயணத்தைத் தொடங்கியுள்ளன. வருகிற 29-ஆம் தேதி ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை இவை வந்தடையும். பின்னர் அன்றைய தினமே இந்திய விமானப்படையில் அவை இயக்கப்படும். இந்த 5 ரஃபேல் விமானங்களில் 3 விமானங்களில் ஒரு இருக்கையும், 2 விமானங்களில் இரண்டு இருக்கைகளும் உள்ளன.
பயணத்தின் இடையே, ஐக்கிய அரபு அமீரகத்தில் ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.