கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் முதலில் ஜூலை 23-ம் தேதி திருவனந்தபுரத்தில் வைத்து 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது சுங்கத் துறை அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, கொச்சியில் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரை இன்று காலை ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் கொச்சியிலேயே தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து 2-வது நாளாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை 10 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதையடுத்து, இரவு 8.30 மணியளவில் விசாரணை முடிந்து திரும்பினார் சிவசங்கர். அவர் தற்போது திருவனந்தபுரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சிவசங்கரின் வழக்கறிஞர் தெரிவித்ததாவது:
"என்ஐஏ யாரை விசாரிக்க வேண்டும் என்று நினைக்கிறதோ, அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கலாம். விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. அடுத்து வரும் விசாரணைக்கும் சிவசங்கர் ஒத்துழைப்பு தருவார்."