திருவனந்தபுரம்: உங்களுக்கு கரோனா தொற்றில்லை என்று எட்வார்டிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொன்ன போது எந்த பலனும் இல்லை, ஏன் என்றால், அறை முழுக்க நிரம்பியிருந்த கரோனா நோயாளிகளிடம் இருந்து அவருக்கு தொற்று ஏற்கனவே பரவியிருந்தது.
இது பற்றி அவரே கூறுகையில், எனக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பில்லை என்று முடிவு வந்துள்ளது. ஆனால், அந்த பரிசோதனை முடிவை சரியாக பார்க்காத அதிகாரிகள், எனக்கு கரோனா இருப்பதாகக் கருதி, கரோனா வார்டில் அனுமதித்துவிட்டனர். எனக்கு நேரிட்டது போன்ற ஒரு பிரச்னை யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்கிறார்.
எட்வார்ட், அரசு ஊழியர், பிரதம மந்திரியின் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பெற வேண்டும் என்றால் கரோனா இல்லை என்ற சான்றிதழை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இதற்காக கரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு கரோனா இல்லை என்று தெரிய வந்தும் கூட, அதை சரியாக கவனிக்காத சுகாதாரத் துறையினர், அவரை கரோனா வார்டில் அனுமதித்துவிட்டனர். இது குறித்து தொடர்ச்சியாக அவர் கேள்வி எழுப்பி, எனது கரோனா பரிசோதனை முடிவை அளிக்குமாறு வற்புறுத்தியபோதுதான், அவருக்கு கரோனா இல்லை என்பது தெரிய வந்தது. அப்போது அங்கிருந்த சில ஊழியர்கள், உங்களுக்குதான் கரோனா இல்லையே, ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால், அதற்குள் அவர் சுமார் 5 நாள்களை, 50 கரோனா நோயாளிகளுடன் கழித்துவிட்டிருந்தார். இதனால் அவருக்கு இரண்டாவது முறை எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், முடிவு அவருக்கு பாதகமாகவே வந்துள்ளது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் எட்வார்ட் புகார் அளித்துள்ளார்.
கல்லூரி ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வரும் எட்வார்டுக்கு கரோனா உறுதியாகாமலேயே உறுதி செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல், அவர் பணியாற்றி வந்த கல்லூரியில் தேர்வு நடத்தப்பட்டதால், சுமார் 1000க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர். இது ஒட்டுமொத்த சுகாதாரத் துறைக்கும் தலைகுனியவைக்கும் விஷயமாக மாறிவிட்டது என்கிறார்.
இதுபோலவே பெட்ரோல் பங்கில் பணியாற்றும் ரமேஷ் என்பவரையும், வேறு ஒருவருக்கு பதிலாக கரோனா வார்டில் அனுமதித்துவிட்டனர். பிறகு தவறை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.