ஹைதராபாத்தில் வீடு ஒன்றிற்கு 4 மாத மின் கட்டணமாக ரூ.6.67 லட்சம் செலுத்தக் கூறி அம்மாநில மின்சாரத்துறை தரப்பில் ரசீது அனுப்பப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்தது. அதன் பின் போடப்பட்ட மின் கட்டணம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள அம்பர்பேட் பகுதியில் வசித்து வருபவர் பி.வீராபாபு. இவரது வீட்டுக்கு நான்கு மாத மின் கட்டணமாக ரூ .6.67 லட்சம் செலுத்தக் கூறி அம்மாநில மின்சாரத் துறை ரசீது ஒன்றை அண்மையில் அனுப்பியிருக்கிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வீராபாபு மின்சாரத் துறை அலுவலகத்தை அணுகி புகார் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இதற்கு செவிசாய்க்கவில்லையாம். உடனே அவர் இதுதொடர்பாக விடியோ ஒன்றை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இது வைரலாகவே உடனடியாக மின்சாரத் துறை அதிகாரிகள், வீரபாபுவை அணுகி அவரது வீட்டு மின் மீட்டரை மாற்றி தந்திருக்கிறார்கள். இதுகுறித்து வீராபாபு கூறுகையில், "வழக்கமாக, எனது வீட்டிற்கு சுமார் 800 முதல் 1,100 ரூபாய் வரைதான் மின்சார நுகர்வு கட்டணம் வரும்.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக மின்வாரியத்தில் இருந்து ரீடிங் எடுக்க வீட்டிற்கு யாரும் வரவில்லை. மேலும் மின் கட்டணம் தொடர்பான ரசீதையும் அவர்கள் அனுப்பவில்லை. சில நாள்களுக்கு முன்பு, அம்பர்பேட்டில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.6.67 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது வந்தது. உடனடியாக நான் மின்சாரத் துறை அலுவலகத்தை அணுகினேன், ஆனால் அவர்கள் எனது கேள்விக்கு பதிலளிக்கவில்லை" என்றார் வீராபாபு.