திறமையானவர்களின் உதவியை மோடி அரசு நாட வேண்டும்: ப. சிதம்பரம்
மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தோல்வியை ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கியத் துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது: (1) தொலைதொடர்பு, (2) விமானப் போக்குவரத்து. இந்த இரண்டு துறைகளும் குலைந்தால் இன்னும் பல்லாயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் அழிந்துவிடும்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசு செயலிழந்து நிற்கிறது. மோடி அரசின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று நான் பல நாள்களாகச் சொல்லி வருகிறேன்.
மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை."