உத்தரகண்ட் மாநிலத்தில் சிற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எம்எல்ஏவை அவரது ஆதரவாளர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ள நீர் சூழந்துள்ளது. அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பியதோடு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிதோராகர் மாவட்டம் தார்சுலா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்றிருக்கிறார். அப்போது அவர் சிற்றாறு ஒன்றை கயிறு மூலம் கடக்க முயன்றபோது திடீரென வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார்.
சிறிது தூரம் சென்ற அவரை அவருடன் சென்ற ஆதரவாளர்கள் உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.