ஆந்திரத்தில் கரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஆந்திரத்தில் இன்று தாதேபள்ளி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆய்வு செய்தார்.
பின்னர் பேசிய அவர், கரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5,000 வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆந்திரத்தில் கடந்த சில நாள்களாக ஒருநாள் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.