புது தில்லி: ஒரு பக்கம் கரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் கவனம் செலுத்தினாலும், அதே சமயம், மற்றொரு பக்கம் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற சிஐஐ ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சியை மீட்பதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.
கரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ஏழை, எளிய மக்களின் நலன் காக்க இதுவரை ரூ.53 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரணத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கரீப் கல்யாண் திட்டத்தில் 74 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொள்வது மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும் என்று மோடி கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், நிச்சயமாக நாம் மீண்டும் நமது பொருளாதார வளர்ச்சியை அடைவோம். கரோனா நமது பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை வேண்டுமானால் குறைத்திருக்கலாம், ஆனால், இந்தியா மீண்டும் அதே வேகத்தோடு பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் என்று தெரிவித்துள்ளார்.