அயோத்தியில் ராமர் கோயில்: கட்டுமானப் பணிகள் நாளை தொடக்கம்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் புதன்கிழமை தொடங்கப்படவுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் புதன்கிழமை தொடங்கப்படவுள்ளன.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் சர்ச்சைக்குள்பட்டிருந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக " ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை' அமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார்.

அயோத்தியில் தற்போதுள்ள ராமர் கோயில் பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் ஜூன் 10-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கோபால்தாஸின் செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நாராயண் தாஸ் திங்கள்கிழமை தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ""ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தப்படவுள்ளது. சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு முன்னதாக சிவபெருமானை ராமபிரான் வழிபட்டார். 

அதை நினைவுகூரும் வகையில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படவுள்ளது.இந்த வழிபாடு சுமார் 2 மணி நேரம் நடைபெறும். அதையடுத்து ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்படுவதோடு கட்டுமானப் பணிகளும் தொடங்கும்'' என்றார்.

கோயில் திறப்பு
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அயோத்தி கோயில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வழிபாடு நடத்துவதற்கு ஒரே நேரத்தில் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் எதுவும் வழங்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com