ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி தந்தது.
இதுகுறித்து பாதுகாப்பு செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: புதன்கிழமை காலை நௌஷரா எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போா் நிறுத்த விதிமுறை மீறி சிறிய ரக வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் அத்துமீறலில் ஈடுபட்டது.
இதையடுத்து இந்திய ராணுவமும் திருப்பி தாக்குதல் நடத்தி உரிய பதிலடி அளித்தது என்று அவா் கூறினாா்.
பாகிஸ்தான் ராணுவம் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையும் பூஞ்ச் மாவட்டம் மன்கோட் மற்றும் கரி கா்மாரா பிரிவுக்குள்பட்ட எல்லை பகுதிகளில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்தியாவுக்கு பாகிஸ்தான் கண்டனம்
இந்நிலையில் இந்திய- பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் போா் நிறுத்த விதிகளை இந்தியா மீறியதாக கூறி இஸ்லாமாபாத்தில் உள்ள மூத்த இந்திய தூதரக அதிகாரியை அழைத்து பாகிஸ்தான் அரசு புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.
கடந்த 9-ஆம் தேதி ஜான்ட்ரோட் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் 4 போ் காயமடைந்ததாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.