புது தில்லி: தலைநகர் தில்லியில் தற்போது கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதை அடுத்து, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதியுறுவதாகவும் தகவல்கள் வெளியாகும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
புது தில்லியில் சனிக்கிழமை நிலவரப்படி கரோனா பாதிப்பு 36 ஆயிரமாகவும், கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200 ஆகவும் உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மற்றும் சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என்று அமித் ஷாவின் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.