அரசின் கோதுமை கொள்முதல் இதுவரை இல்லாத அளவாக 38.2 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.
இதுதொடா்பாக உணவு வழங்கல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2020-21 சந்தை ஆண்டில் இதுவரை 38.2 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் இதுவரை இல்லாத அளவாகும். இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2012-13 சந்தை ஆண்டில் 38.18 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக மொத்தம் ரூ.73,500 கோடியானது 42 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கோதுமை கொள்முதலுக்கான இலக்காக 40.7 மில்லியன் டன் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கொள்முதலுக்கான கோதுமையை வழங்கியதில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலம் 12.9 மில்லியன் டன், பஞ்சாப் 12.7 மில்லியன் டன், ஹரியாணா 7.4 மில்லியன் டன், உத்தர பிரதேசம் 3.2 மில்லியன் டன், ராஜஸ்தான் 1.9 மில்லியன் டன் கோதுமையை வழங்கியுள்ளன.
இதனிடையே, அரசு 11.9 மில்லியன் டன் ராபி அரிசியை கொள்முதல் செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக தெலங்கானாவிடமிருந்து 6.4 மில்லியன் டன்னும், ஆந்திர பிரதேசத்திடமிருந்து 3.1 மில்லியன் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் கோதுமை கொள்முதலை இந்திய உணவுக் கழகமும், மாநில அரசு அமைப்புகளும் மேற்கொள்கின்றன.