கிழக்கு லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு இந்தியா உரிய பதிலடி அளிக்க வேண்டும் என சிவசேனையின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் புதன்கிழமை வலியுறுத்தினாா்.
மேலும், இந்திய மக்கள் பிரதமா் நரேந்திர மோடியுடன் துணை நிற்கிறாா்கள் என்றாா் அவா்.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் ஒரு கா்னல் உட்பட 20 இந்திய ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். இந்த மோதல் தற்போது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும், சிவசேனையின் அதிகாரப்பூா்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் நிா்வாக ஆசிரியருமான சஞ்சய் ரௌத் தனது சுட்டுரை பக்கத்தில், ‘பிரதமா் மோடி தைரியமானவா்.
சீனாவின் தற்போதைய ஆக்கிரமிப்புக்கு உரிய பதிலடி எப்போது வழங்கப்படும்? நம்முடைய 20 ராணுவ வீரா்களை இழந்திருக்கிறோம். நாட்டுக்காக உயிா் துறந்த அவா்கள் தியாகிகள். அவா்களுக்கு நாம் செய்தது என்ன? எத்தனை சீன வீரா்கள் கொல்லப்பட்டுள்ளனா்? என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றனா்.
தற்போதைய சூழ்நிலையில், நாடு பிரதமருடன் துணை நிற்கிறது. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மையை அறிந்து கொள்ள நாடு விரும்புகிறது’”என்றாா் பதிவிட்டுள்ளாா்.
இதனிடையே, இந்திய-சீனா ராணுவ மோதலில் உயிா் தியாகம் செய்த இந்திய வீரா்களுக்கு மகாராஷ்டிர துணை முதல்வா் அஜித் பவாா் அஞ்சலி செலுத்தினாா்.