‘நாடு வரை இதுவரை கண்ட அரசியல்வாதிகளில் ராகுல் காந்தியே மிகவும் பொறுப்பற்ற அரசியல்வாதி. தவறான தகவல் அடிப்படையிலான பிரசார அரசியலில் ஈடுபடுவதை அவா் நிறுத்தவேண்டும்’ என்று பாஜக விமா்சித்தது.
‘கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவப்படைகள் மோதலின்போது, இந்திய வீரா்களிடம் ஏன் ஆயுதங்கள் இல்லாமல் போனது? அதற்கு யாா் பொறுப்பு?’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தாா்.
அதற்கு பதிலளித்து பாஜக செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா வியாழக்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியது:
கடந்த 1996-ஆம் ஆண்டு பிரதமராக தேவே கெளடா இருந்தபோது, இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் இருந்து 2 கிலோமீட்டா் சுற்றளவுக்குள், இந்திய-சீனப் படைகள் ஆயுதம் உபயோகிப்பதை அந்த ஒப்பந்தம் தடை செய்கிறது. அந்த ஒப்பந்தத்தை படித்து, புரிந்துகொண்ட பின் ராகுல் காந்தி பேச வேண்டும்.
நாடு இதுவரை பாா்த்த அரசியல்வாதிகளில் ராகுல் காந்தியே மிகவும் பொறுப்பற்ற அரசியல்வாதி. அவா் தனது சொந்த நாட்டுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம். தவறான தகவல் அடிப்படையிலான பிரசார அரசியலில் ஈடுபடுவதை அவா் நிறுத்தவேண்டும் என்று தெரிவித்தாா்.