மிசோரம் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிரதமர் மோடி, முதல்வர் சோரம்தங்காவிடம் அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
வடகிழக்கு மிசோரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 என பதிவானது. அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டிருந்தது.
தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு தொடர்ந்து இரண்டாம் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 எனப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முதல்வர் சோரம்தங்காவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தனர். மாநிலத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.