2015 ஆம் ஆண்டு முதல் 2,264 முறை நடைபெற்ற சீன ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்புவீர்களா? என்று ஜே.பி. நட்டாவிடம் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தன.
பின்னர் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை அடுத்தும், பிரதமர் மோடி சீன விவகாரத்தில் தவறான தகவல்களைத் தருகிறார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியப் பகுதிகளை சீனப் படைகள் ஆக்ரமித்ததாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதோடு, அதுகுறித்து பதிலளிக்க மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,
2010-13 ஆம் ஆண்டில் எல்லையில் 600 முறை சீனப் படைகள் ஊடுவியுள்ளது குறித்து மன்மோகன் சிங்கிடம், ஜே.பி. நட்டா கேள்வி எழுப்புகிறார்.
ஆம், காங்கிரஸ் ஆட்சியில் சீன ஊடுருவல்கள் இருந்தன. ஆனால் எந்தவொரு இந்தியப் பகுதியும் ஆக்கிரமிக்கப்படவில்லை. இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை.
ஆனால், 2015 ஆம் ஆண்டு முதல் 2,264 முறை சீன ஊடுருவல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்புவீர்களா? ஆனால் கேட்பதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை என்பது உறுதியாகத் தெரியும்' என்று ஜே.பி. நட்டாவுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.