சண்டிகர்: ஹரியாணாவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஹரியாணாவின் ஹிண்டன் விமான தளத்திலிருந்து ஹில்வாரா விமான தளத்திற்கு, விமானிகள் உள்ளிட்ட நான்கு பேருடன் இந்திய விமானப் படையின் சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளியன்று பயணம் மேற்கொண்டது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சோனிபேட் நகரத்தில் அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக விமானப்படை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹிண்டனிலிருந்து புறப்பட்டு 14 நாட்டிகல் மைல்களில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோனிபேட் நகரத்தில் உள்ள கிழக்கு வட்ட சுற்றுச்சாலையில் ஹெலிகாப்டர் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விஷயத்தில் விமானிகள் எடுத்த முடிவானது சரியானதும் பொருத்தமானதும் ஆகும். இந்த தரையிறக்கத்தின்போது எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. அதிலிருந்த நால்வரும் பத்திரமாக உள்ளனர். உடனடியாக பணியாளர்கள் அனுப்பப்பட்டு கோளாறு சரிசெய்யப்பட்டு ஹெலிகாப்டர் ஹிண்டனுக்குத் திரும்பியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.