புது தில்லி: உலகளவில் பிற நாடுகளை விட கரோனா பாதிப்பில் இந்தியா நல்ல நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மலங்கரா மார் தோமா சிரியன் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற டாக்டர் ஜோசப் மார் தோமாவின் 90வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நாட்டில் பாஜக தலைமையிலான அரசின் திட்டங்களால் சுமார் 8 கோடி குடும்பங்கள் புகையில்லா சமையலறையைப் பெற்றுள்ளன. வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு இதுவரை சுமார் 1.5 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகச் சிறந்த மருத்துவ திட்டமாக ஆயுஷ்மான் பாரத் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், கரோனா தொற்று இந்தியாவில் மிகத் தீவிரமாக இருக்கும் என்று கணித்திருந்தனர். ஆனால், பொது முடக்கம், மத்திய அரசு, பொது மக்களின் ஒத்துழைப்போடு எடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, கரோனா தொற்று பாதிப்பில் பல நாடுகளைக் காட்டிலும் இந்தியா சிறப்பான இடத்திலேயே உள்ளது. இந்தியாவில் குணமடைவோர் விகிதமும் உயர்ந்து வருகிறது என்று கூறினார்.