மும்பை: மகாராஷ்டிரத்தில் ஜூன் 30-க்குப் பிறகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறு மதியம் மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக அவர் ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:
மாநிலத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் எல்லாம் ஜூன் 30-ஆம் தேதியோடு முடிந்து விடும் என்று தோன்றவில்லை. மாநிலத்தில் கரோனா தொற்றின் தாக்கம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக நீடிக்கும்போது, நாம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கரோனா மட்டுமல்ல பருவகால தொற்றுநோய்களான மலேரியா மற்றும் டெங்கு ஆகியவற்றில் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
தொற்றின் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீண்டும் தங்களது சேவையைத் துவக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மும்பை மாநகர காவல்துறையும் ஊரடங்கு கட்டுபாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் பிரசாரங்களைத் துவக்கியுள்ளது