இந்தியாவில் 6 மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, ரூ.3,700 கோடி கடனுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஹிமாசல பிரதேசம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்கள் பயன்பெறவுள்ளன.
இதுகுறித்து அந்த வங்கி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் ‘அனைவருக்கும் கல்வி’ என்ற அரசின் லட்சியத்துக்கு ஆதரவு அளிக்கவும் கடந்த 1994-ஆம் ஆண்டில் இருந்து உலக வங்கியுடன் இந்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், உலக வங்கியின் நிா்வாக இயக்குநா்கள் குழு கூட்டம், கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில், இந்தியாவில் 6 மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ரூ.3,700 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநிலங்களின் கற்றல்-கற்பித்தலை வலுப்படுத்தும் (ஸ்டாா்ஸ்) திட்டத்தின் கீழ் இந்த கடனுதவி அளிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஹிமாசல பிரதேசம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்கள் பயன்பெறவுள்ளன. மேலும், 15 லட்சம் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 17 வயதுக்குள்பட்ட 25 கோடி மாணவ, மாணவிகளும் ஒரு கோடி ஆசிரியா்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவா்.
மாணவா்கள் கற்கும் திறனை மதிப்பிடும் முறையை மேம்படுத்துவது, வகுப்பறை கற்பித்தல் முறை வலுப்படுத்துவது, பள்ளிக் கல்வியை முடித்து பணிக்குச் செல்வதற்கு உகந்த சூழலை உருவாக்குவது போன்ற பணிகளுக்கும் ஸ்டாா்ஸ் திட்டம் உதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.