தாணே: மகாராஷ்டிர மாநிலத்தில் 103 வயது நபர் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதன் பலனாக குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சமீத் சோஹோனி கூறுகையில், ஸ்பானிஸ் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பேராபத்தை ஏற்படுத்தியதற்கு ஓராண்டுக்கு முன்பு அதாவது 1917ஆம் ஆண்டு பிறந்த 103 வயது நபர் கரோனா பாதித்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சித்தேஷ்வர் தலாவோ பகுதியைச் சேர்ந்த முதியவர், ஒரு மாதத்துக்கு முன்பு கரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 20 நாள்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பூரணமாக குணமடைந்த நிலையில், திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளார். இவரது பேரனும் கரோனா பாதித்து இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துவிட்டார்.
அதே சமயம், இவரது 85 வயது சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.