'கரோனில்' மருந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து 100 சதவிகிதம் குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், இதற்கு மருத்துவ அமைப்பு எதுவும் ஒப்புதல் அளிக்காத நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் மருந்து தொடா்பான தகவல்களை விரைவில் வழங்குமாறும், அந்த மருந்து குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் வரை, அதனை விளம்பரப்படுத்துவதை நிறுத்தவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறுகையில், 'நாங்கள் கண்டுபிடித்த 'கரோனில்' மருந்து மூலமாக கரோனாவை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை. நாங்கள் மருந்துகளை தயாரித்து சோதனைக்காக பயன்படுத்தி வருகிறோம். அதில் மருந்து மூலமாக கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதில் எந்த குழப்பமும் இல்லை' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆயுர்வேத மருத்துவத் துறை அதிகாரி ஒய்.எஸ்.ராவத் கூறுகையில், கரோனில் மற்றும் இரண்டு மருந்துகளின் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. 'கரோனா கிட்' என அவர்கள் மருந்து தொகுப்பு எதனையும் வைத்திருக்கவில்லை. கரோனா வைரஸைக் குறிக்கும் ஒரு படத்தை கரோனில் மருந்துக்கு பயன்படுத்தியுள்ளனர்' என்று தெரிவித்தார்.