ரிவா (ம.பி): மத்திய பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3 எம்எல்ஏக்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் பாஜகவையும், ஒருவர் எதிர்க்கட்சியான காங்கிரஸையும் சேர்ந்தவர்.
இது தொடர்பாக மாவட்ட மருத்துவ அதிகாரி ஆர்.எஸ்.பாண்டே கூறுகையில், "ரிவா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜேந்திர பாண்டேவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அவருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து ஞாயிற்றுக்கிழமை கரோனா பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டது' என்றார்.
முன்னதாக, பாஜகவைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ யஷ்பால் சிங்குக்கு கடந்த 20}ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது.
கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின்போது, இரு எம்எல்ஏக்களும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். யஷ்பாலுக்கு கரோனா உறுதியானதை அடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக ராஜேந்திர பாண்டே அறிவித்தார்.
இந்நிலையில் அவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அவர் முன்பு 2013-8-ஆம் ஆண்டு வரையிலான பாஜக ஆட்சியில் மத்திய பிரதேச மாநில வர்த்தகம், தொழில்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.