திருப்பதி: ஹைதராபாதில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதால், அந்நகரத்தில் முழு பொது முடக்கத்தை மீண்டும் அமல்படுத்த மாநகராட்சி ஆலோசனை செய்து வருகிறது.
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊா் திரும்பியவா்களால் இந்த பாதிப்பு அதிகரித்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதைக் கட்டுப்படுத்த தெலங்கானா அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தெலங்கானா உள்துறை அமைச்சா் முகமது அலிக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா். அவருடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அவருடைய வீடு, அலுவலகம், சென்ற இடங்கள் அத்தனையும் கிருமிநாசினியால் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஹைதராபாத் மாநகரில் மீண்டும் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த அம்மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனா். நகரத்தில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தினால் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனா்.