சிஸ்கோ நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி பிபாஷா சக்ரபர்த்தியை புதிய தகவல் தொடர்புத்துறை தலைவராக நியமிப்பதாக பேஸ்புக் புதன்கிழமை அறிவித்துள்ளது.
கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் தகவல் தொடர்புத்துறைக்கு புதிய தலைமையை நியமித்துள்ளது.
சிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிந்த பிபாஷா சக்ரபர்த்திக்கு இந்தியாவில் பேஸ்புக் தகவல் தொடர்புத்துறை தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சக்ரபர்த்தி, சிஸ்கோ நிறுவனத்தில் கம்யூனிகேஷன்ஸ் துறையின் தலைவராக பணிபுரிந்துள்ளார்.
'இந்தியாவில் பேஸ்புக் பயனாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர், தகவல் தொடர்புகள் எங்களுக்கு ஒரு முக்கியமான செயல்பாடாகும். எங்கள் பயனர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் அரசு எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் பயனர்களை வெளிப்படையாக தொடர்புகொள்வதில் உறுதியாக இருக்கிறோம்' என்று பேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஜித் மோகன் கூறினார்.