புது தில்லி: கரோனா...போ..போ..! என்ற கோஷத்துடன் மத்திய அமைச்சர் ஒருவர் பிரார்த்தனையில் ஈடுபட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
செவ்வாய் நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கரோனா...போ..போ..! என்ற கோஷத்துடன் மத்திய அமைச்சர் ஒருவர் பிரார்த்தனையில் ஈடுபட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மத்திய சமூக நலம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் ராமதாஸ் அத்வாலே, நாடெங்கும் கரோனா வைரஸின் பரவல் மற்றும் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் இவர் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பிராத்தனைக்கூட்டமொன்றில் கலந்து கொண்டார். அவருடன் இந்தியாவிற்கான சீனத் தூதர் தங் யோகாய் மற்றும் புத்த துறவிகள் சிலரும் கலந்துஆண்டனர்.
அப்போது, 'கரோனா..போ; போ..கரோனா' என்று அவர் மற்றவர்களுடன் சேர்ந்து கோஷம் எழுப்பிய விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரும் அவரை இதற்காக விமர்சித்து வருகின்றனர்.