காங்கிரஸ் கட்சியின் 7 மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை அவைத் தலைவர் ஓம் பிர்லா வாபஸ் பெற்றார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 2 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் தில்லி வன்முறை தொடா்பாக உடனடியாக இரு அவைகளிலும் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள், அவைத் தலைவர் ஓம் பிர்லா இருக்கையை முற்றுகையிட்டு, இருக்கையில் இருந்த ஆவணத்தை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கௌரவ் கோகோய், டி.என். பிரதாபன், டீன் குரியகோஸ், மாணிக்கம் தாகூா், ராஜமோகன் உண்ணித்தான், பென்னி பெஹனான், குா்ஜீத் சிங் அவ்ஜலா ஆகிய 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, எம்.பி.க்களின் இடை நீக்கத்தை அவைத் தலைவர் வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இன்றைய கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியினர் இதுகுறித்த கோரிக்கையினை முன்வைக்கவே, அதனை ஏற்றுக்கொண்டு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் மீதான இடை நீக்கத்தை வாபஸ் பெற்றார்.
அவைத் தலைவர் தனது முடிவை திரும்பப் பெற்றதால் இனி 7 பேரும் மக்களவை தொடரில் கலந்துகொள்வார்கள்.