புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 73 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர் என்றும், இது இன்று காலை 11 மணி நிலவரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இவர்களில் 3 பேர் குணமடைந்துவிட்டனர்.
இதற்கு அடுத்த இடத்தில் ஹரியாணா உள்ளது. இங்கு 14 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே வெளிநாட்டினர்.
தில்லியில் 6 பேருக்கும், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசத்தில் தலா 11 பேருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 10 பேர் இந்தியர்கள், ஒருவர் வெளிநாட்டினர்.
கர்நாடகாவில் மூவருக்கும், ராஜஸ்தானில் ஒரு இந்தியர், இரண்டு வெளிநாட்டவர் என மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது.
தெலங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவருக்கு கரோனா உள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் மூவருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது.
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் என்று புதன்கிழமை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. உலகம் முழுவதும் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்தை எட்டியது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.