திருவனந்தபுரம்: வெள்ளிக்கிழமை மாலை முதல், கேரளத்தில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில் சுமார் ஆறு ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக இருப்பதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சனிக்கிழமை மதியம் நிலவரப்படி, கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் 7 பேருக்கும், கோட்டயத்தில் 4 பேருக்கும், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் தலா மூவருக்கும், திரிச்சூர், கன்னூர் பகுதிகளில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட 6,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 300 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பொழுதுபோக்குப் பூங்காக்கள், கடற்கரை மற்றும் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஆலப்புழாவில் இங்கிலாந்தைச் சேர்ந்த இருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் அவர்கள் கண்காணிப்பில் இருந்த நிலையில், தப்பிச் சென்று கொச்சி விமான நிலையத்துக்கு சென்றனர். மருத்துவக் குழுவினரின் எச்சரிக்கை காரணமாக அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.