ஈரான் நாட்டில் சிக்கியுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈரான் நாட்டில் தொழில் செய்வதற்காக சென்றிருந்தனர். அங்கு தற்போது கரோனா வைரஸ் பரவியுள்ளதால், அவர்கள் நாடு திரும்ப முடியாமல் உணவு, மருத்துவ வசதி இன்றி தவித்து வருகின்றனர். அவர்களை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பிரதமரிடம் மனு அளித்தேன்' என்றார்.
இதே கோரிக்கை தொடர்பாக இவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தார். ஈரானில் உள்ள கன்னியாகுமரி மீனவர்கள் பத்திரமாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.