கரோனா வைரஸ் எதிரொலியாக ஸ்ரீநகரில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என்று ஸ்ரீநகரின் துணை ஆணையர் ஷாஹித் இக்பால் சவுத்ரி டிவிட்டர் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில்,
கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஸ்ரீநகரில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவை ஏற்கெனவே மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கிளப்புகள் மற்றும் பொது உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஜம்முவில் இதுவரை 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது பேரின் இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருக்கின்றன.
கரோனா கட்டுக்குள் வரும் வரை, அதனைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.