மலேசியாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க ஏர் ஏசியா விமானங்கள் அனுப்பப்படவுள்ளன என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் படித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக மணிலா பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிலிப்பைன்ஸ் அரசும் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக தாயகம் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இன்று (செவ்வாய்கிழமை) மலேசியா வழியாக இந்தியா திரும்ப முயற்சித்தனர். ஆனால், இந்தியாவுக்கு வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் மலேசியாவில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டனர். இதனால், அவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கே திரும்ப அனுப்பப்படுவதற்கான சூழல் உருவானது.
இதையடுத்து, தாங்கள் உடனடியாக தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பான விடியோக்கள் ஊடகங்களில் வெளியாகின.
இந்நிலையில், கோலாலம்பூரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பதற்காக ஏர் ஏசியா விமானங்களை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விமானங்கள் மூலம் அவர்கள் தில்லி மற்றும் விசாகப்பட்டினத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.