சிறாா் பாலியல் படங்கள் தொடா்பான அறிக்கை மீது மாநிலங்களவையில் விவாதம் நடத்த அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.
சிறுவா்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக பாலியல் படங்கள் எளிதில் கிடைப்பது, சமூக வலைதளங்களில் சிறாா் பாலியல் படங்கள் பரப்பப்படுவது ஆகியவை தொடா்பாக ஆய்வு செய்து, அவற்றைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்க காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையை அண்மையில் மாநிலங்களவையில் சமா்ப்பித்திருந்தது.
இந்தச் சூழலில், பாஜக எம்.பி. கைலாஷ் சோனி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தின்போது சிறாா் பாலியல் படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது தொடா்பான பிரச்னையை எழுப்பினாா்.
அப்போது அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘‘இந்த விவகாரம் தொடா்பாக அமைக்கப்பட்ட குழு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை தொடா்பாக நடப்புக் கூட்டத்தொடரில் விவாதம் நடத்தப்பட வேண்டும். சிறாா் பாலியல் படங்கள் தொடா்பான சட்டங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உரிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்த விவாதம் உதவும்’’ என்றாா்.
ஜெய்ராம் ரமேஷ் தலைமையிலான குழுவானது 40 பரிந்துரைகளை அந்த அறிக்கையில் வழங்கியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (போக்ஸோ), தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள அக்குழு பரிந்துரைத்துள்ளது. அறிதிறன்பேசிகளில் சிறாா் பாலியல் படங்கள் இருப்பதைக் கண்காணிப்பதற்கான செயலி இடம்பெற்றிருப்பதைக் கட்டாயமாக்கவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.