அரசின் இயலாமையால் கரோனா விஷயத்தில் இந்தியா மிகப் பெரிய விலையைக் கொடுக்கப்போகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சுட்டுரைப் பதிவில்,
"கரோனா வைரஸை எதிர்கொள்ள துரிதமான அதிரடி நடவடிக்கை தேவை. உறுதியாக செயல்பட முடியாத அரசின் இயலாமையால் இந்தியா மிகப் பெரிய விலையைக் கொடுக்கப்போகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் பாதித்தோரின் எண்ணிக்கை 150-ஐ தொட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது.
இந்த வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு, வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.