ஹைதராபாத்: கரோனா எதிரொலியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படும் ஒரே ஒரு முக்கிய விஷயம் கைகளைக் கழுவுங்கள்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல தொழில்கள் முடங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அதிகமாகக் கைகழுவுவதால், வழக்கமான அளவை விட தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு கரோனா பரவலைத்தொடர்ந்து அதிகரித்திருப்பதாக ஹைதராபாத் மாநகராட்சி தண்ணீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதே சமயம், கிருமி நாசினிகளைப் பயன்படுத்துவதை விடவும், சோப்புப் போட்டு 20 நிமிடம் கைகளைக் கழுவுதல் என்பதுதான் பொதுமக்களின் பாதுகாப்புக்கு சிறந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே நீர் ஆதாரங்களில் இருந்து அளவுக்கு அதிகமாகவே தண்ணீர் எடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் வழங்குதலை அதிகரிக்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
பொதுவாகவே மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் நிலத்தடி நீரையே, சுத்தப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்துவது வழக்கம் என்பதால், கரோனா வைரஸ் பரவலால் நேரடியாக ஏற்பட்ட எத்தனையோ பிரச்னைகளுக்கு இடையே, தண்ணீர் பற்றாக்குறை மேலும் ஒரு சிக்கலாக மாறக் கூடுமோ என்று அஞ்சப்படுகிறது.