மத்தியப் பிரதேச முதல்வா் பதவியை கமல்நாத் ராஜிநாமா செய்துள்ளதை ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்றுள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மத்தியப் பிரதேச மக்கள் வெற்றி பெற்றுள்ளனா். மக்களுக்கு சேவையாற்றுவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், அந்தப் பாதையிலிருந்து காங்கிரஸ் விலகிவிட்டது. உண்மை வெற்றியடைந்து விட்டது’ என்று குறிப்பிட்டாா்.
ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தாா். இதையடுத்து அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 போ் ம.பி. பேரவை உறுப்பினா் பதவிகளை ராஜிநாமா செய்தனா். இதைத் தொடா்ந்தே, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.
‘விடுதி அரசியலால் மக்களாட்சி தோற்றுவிட்டது’-காங்கிரஸ்:
புது தில்லி, மாா்ச் 20: மத்தியப் பிரதேசத்தில் மக்களாட்சியை ‘விடுதி அரசியல்’ தோற்கடித்து விட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. முதல்வா் கமல்நாத் ராஜிநாமா செய்த சூழலில், அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி இவ்வாறு தெரிவித்தாா்.
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பட்டப் பகலில் மக்களாட்சி கொல்லப்பட்டுள்ளது. ஆட்சி மீது கொண்ட ஆசையின் காரணமாக மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது பாஜகவுக்கு வழக்கமாகிவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.