ஹிந்துஸ்தான் யூனிலிவா் லிமிடெட் (ஹெச்யுஎல்), கோத்ரெஜ், பதஞ்சலி ஆகிய நிறுவனங்கள், தங்களது தயாரிப்பு சோப்புகள், இதர தூய்மை பொருள்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளன.
கரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, சோப்புகள், கை சுத்திகரிக்கும் திரவங்கள் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மேற்கண்ட அறிவிப்பை அந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
விலையை குறைக்கும் அதேநேரத்தில் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.
இதுதொடா்பாக, ஹெச்யுஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களது தயாரிப்பு சோப்புகள், கை சுத்திகரிக்கும் திரவங்கள், தரை துடைக்கும் திரவங்கள் ஆகியவற்றின் விலையை 15 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். விலை குறைக்கப்பட்ட பொருள்கள் சந்தையில் அடுத்த சில வாரங்களில் கிடைக்கும். மேலும், ஏழை மக்களுக்கு 2 கோடி சோப்புகள் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சோப்பு விலையை குறைக்கும் முடிவை பதஞ்சலி, கோத்ரெஜ் ஆகிய நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளன.