புது தில்லி: இரண்டு ரயில்களில் பயணித்த 12 பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மார்ச் 13ம் தேதி தில்லியில் இருந்து ராமகுண்டம் இடையே இயக்கப்பட்ட ஏபி சம்பர்க் கிராந்தி விரைவு ரயிலில் பயணித்த 8 பயணிகளுக்கும், மும்பை - ஜபல்புர் இடையே மார்ச் 16ம் தேதி இயக்கப்பட்ட கோடான் விரைவு ரயிலில் பி1 பெட்டியில் பயணித்த 4 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நால்வரும் துபையில் இருந்து கடந்த வாரம் இந்தியா வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஏராளமான விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.