கொல்கத்தா: கரோனா பரவல் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசியை முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி இலவசமாக வழங்குகிறார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 539 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசியை முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி இலவசமாக வழங்குகிறார்.
இதுதொடர்பாக புதனன்று அரசுத் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவுத் தேவைக்காக உதவும் பொருட்டு, சவ்ரவ் கங்குலி மற்றும் லால் பாபா அரிசி ஆலை தரப்பினர் இருவரும் இணைந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்க சம்மதித்துள்ளார்கள் என்ற செய்தி மனதிற்கு மிகுந்த நெகிழ்ச்சி அளிக்கிறது.
கங்குலியின் இந்த செய்கை மற்றவர்களையும் இதேபோல உதவிகளை செய்யத் தூண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.