புது தில்லி: கரோனா எதிரொலியாக இன்று முதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 606 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 11 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கரோனா எதிரொலியாக இன்றுமுதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.